×

திருமங்கலம் – சோழவந்தான் இடையே கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை

திருமங்கலம், செப். 7: திருமங்கலம் – சோழவந்தான் வழித்தடத்தில் கூடுதல் டவுன் பஸ்களை இயக்க அரசுபோக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருமங்கலத்திலிருந்து சோழவந்தானுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முற்றிலும் கிராம பகுதிகளை உள்ளடக்கிய இந்த வழித்தடத்தில் போதுமான அளவு டவுன் பஸ்கள் இல்லை. திருமங்கலம் டிப்போவில் 2, சோழவந்தான் டிப்போவில் 1, செக்கானூரணி டிப்போவில் 3 என இந்த வழித்தடத்தில் 6 டவுன்பஸ்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. திருமங்கலத்திலிருந்து 20 நிமிடங்களுக்கு ஒரு டவுன் பஸ் என சோழவந்தானுக்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் செக்கானூரணியில் டிப்போ துவக்கப்பட்ட பின்பு, இந்த வழித்தடத்தில் ஓடிய பஸ்களில் மூன்று பஸ்கள் அந்த டிப்போவிற்கு மாற்றப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுவது குறைந்தது.

மதியவேளைகளில் திருமங்கலத்திலிருந்து சோழவந்தான் செல்லவேண்டிய டவுன்பஸ்கள் கட் டிரிப்பாக செக்கானூரணியுடன் திரும்புவதால் பயணிகள் சோழவந்தான் மற்றும் திருமங்கலத்தில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதேபோல் இரவு வேளையிலும் செக்கானூரணியுடன் பஸ்கள் நிறுத்தப்பட்டு விடுகின்றன. மேலும் தொடர்ந்து இரண்டு மூன்று பஸ்கள் அடுத்தடுத்து செல்வது போல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சோழவந்தான் பஸ்சிற்காக ஒரு மணிநேரம் வரையில் கூட காத்திருக்கவேண்டியுள்ளது.

இதனை பயன்படுத்தி திருமங்கலத்திலிருந்து அதிகளவு ஷேர் ஆட்டோக்கள் ஓடத்துவங்கியுள்ளன. பஸ்ஸ்டாப்புகளில் காத்திருக்கும் பயணிகளை இந்த ஆட்டோக்கள் ஏற்றி செக்கானூரணி வரையில் கொண்டு போய் இறக்கிவிடுகின்றன. வழியில் உள்ள உரப்பனூர், கரடிக்கல், கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி பிரிவு, சிக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமமக்கள் ஷேர் ஆட்டோவை நம்பி ஏறுகின்றனர். இதனை முறைப்படுத்தி டவுன் பஸ்களை இயக்கவேண்டும்.

மேலும் திருமங்கலம் சோழவந்தான் வழித்தடத்தில் திருமங்கலம் டிப்போ மற்றும் சோழவந்தான் டிப்போவிலிருந்து கூடுதல் டவுன் பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழகம் முன்வரவேண்டும். செக்கானூரணி டிப்போ பஸ்களே இந்த வழித்தடத்தில் தேவையில்லை. திருமங்கலம் மற்றும் சோழவந்தான் டிப்போக்கள் மட்டும் டவுன்பஸ்களை இயக்கினால் தேவையற்ற குழப்பம் ஏற்படாது. இரண்டு மார்க்கத்திலும் நீண்டநேரம் பஸ்சிற்கு காத்திருக்க தேவையில்லை என்கின்றனர் பயணிகள்.

The post திருமங்கலம் – சோழவந்தான் இடையே கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Cholavanthan ,Thirumangalam ,Government Transport Corporation ,Thirumangalam – Cholavanthan ,Tirumangalam – ,
× RELATED ரயில்வே ஸ்லீப்பர் கட்டை தயாரிக்க 2,830...